கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் ஆட்டம் டையில் முடிவடைந்தது. அதில் 231 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
ஆனால் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியை 230 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து போட்டியை டையில் முடித்தனர். இந்திய அணியின் 9 விக்கெட்களை சுழற்பந்து வீச்சாளர்களே கபளீகரம் செய்திருந்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தங்களது வியூகங்களை மாற்றி அமைப்பதில் கவனம் செலுத்தக்கூடும்.
அதேவேளையில் பேட்டிங்கை பலப்படுத்தும் வகையில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடிய ரிஷப் பந்த் அல்லது ரியான் பராக் இன்று களமிறங்கக்கூடும். இது நிகழ்ந்தால் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. பேட்டிங்கில் ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினால் வெற்றியை வசப்படுத்தலாம்.