ஹாட்ரிக் பதக்கம் நோக்கி மனு பாகர் முதல் ஹாக்கி அணி சாதனை வரை | இந்தியா @ ஒலிம்பிக்

By செய்திப்பிரிவு

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நேற்று தகுதி சுற்று நடைபெற்றது. துல்லியம், ரேப்பிடு ஆகிய இரு பிரிவுகளை உள்ளடக்கிய இந்த போட்டியில் இந்தியாவின் மனு பாகர் 590 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவர், இரு பிரிவுகளிலும் முறையே 294 மற்றும் 296 புள்ளிகள் சேர்த்தார்.

ஹங்கேரியின் வெரோனிகா 592 புள்ளிகளை குவித்து தகுதி சுற்றில் ஒலிம்பிக் சாதனையை சமன் செய்து முதலிடத்துடன் இறுதி சுற்றில் நுழைந்தார். இதற்கு முன்னர் தகுதி சுற்றில் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சீனாவின் ஜிங்ஜிங் ஜாங் 592 புள்ளிகளை எடுத்திருந்தார். இஸ்ரேலின் அன் ஹனியே ரோஸ்டாமி 588 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து இறுதி சுற்றில் கால்பதித்தார்.

வியட்நாமின் து வின் டிரின்ஹ் (587), சீனாவின் நன் ஜாவோ (586), கொரியாவின் ஜின் யங் (586), பிரான்ஸின் கமிலி ஜெட்ரிஜெவ்ஸ்கி (585), அமெரிக்காவின் கேட்லின் மோர்கன் (585) ஆகியோர் முறையே 4 முதல் 8 இடங்களை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இந்த போட்டியில் 40 பேர் கலந்து கொண்ட நிலையில் முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறினர். மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் தகுதி சுற்றில் 581 புள்ளிகள் சேர்த்து 18-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 22 வயதான மனு பாகர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். தற்போது 3-வது பதக்கத்தை வெல்லும் முனைப்பில் 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார். இறுதிப் போட்டி இன்று பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது.

பால்ராஜ் பன்வார் 23-வது இடம்: படகு போட்டியில் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 13 முதல் 24-வது இடங்களுக்கான பந்தயத்தில் கலந்து கொண்ட அவர், தனது பிரிவில் 5-வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக அவர், 23-வது இடத்துடன் போட்டியை நிறைவு செய்தார்.

வில்வித்தையில் பதக்கம் நழுவியது: வில்வித்தையில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத்,தீரஜ் பொம்மதேவாரா ஜோடி, இந்தோனேஷியாவின் தியானந்தா சோய்ருனிசா, ஆரிஃப் பங்கஸ்து ஜோடியை எதிர்கொண்டது. இதில் அங்கிதா பகத், தீரஜ் பொம்பதேவாரா ஜோடி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கால் இறுதி சுற்றில் இந்திய ஜோடி ஸ்பெயினின் கேனல்ஸ் எலியா, அச்சா கோன்சலஸ் பப்லோ ஜோடியுடன் மோதியது. இதில் அங்கிதா பகத், தீரஜ் பொம்பதேவாரா ஜோடி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் வரலாற்றில் அரை இறுதி சுற்றில் இந்திய ஜோடி, கொரியாவின் லிம் சிஹ்யோன், கிம் வூஜின் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் அங்கிதா பகத், தீரஜ் பொம்பதேவாரா ஜோடி 2-6 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடி அமெரிக்காவின் கேசி காஃப்ஹோல்ட், பிராடி ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

துலிகா மான் வெளியேற்றம்: ஜூடோவில் மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவில் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் துலிகா மான் தனது முதல் சுற்றில் 4 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள கியூபாவின் இடாலிஸ் ஓர்டிஸுடன் மோதினார். இதில் துலிகா மான் 0-10 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

1952-க்கு பிறகு ஆஸி.யை வீழ்த்தியது இந்திய அணி: ஆடவர் ஹாக்கியில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 12-வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் பீல்டு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றுக்கொடுத்தார். அடுத்த நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

25-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் தாமஸ் கிரெய்க், பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். 32- வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் கிடைத்தது. இதை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற இந்திய அணியின் முன்னிலை 3-1 என அதிகரித்தது. 56-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் பிளேக் குரோவர்ஸ், பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பில் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 2-3 என நெருங்கி வந்தது. எனினும் எஞ்சிய 5 நிமிடங்களில் அந்த அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. கடைசியாக 1972-ம் ஆண்டு முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்திருந்தது. அதன் பின்னர் 52 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது இந்திய அணி.

5 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியிருந்தது. இதன் பின்னர் அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிரா செய்தது. தொடர்ந்து அயர்லாந்து அணியை 2-0 என வீழ்த்தியது. அதேவேளையில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்துக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது இந்திய அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE