ஒலிம்பிக் வில்வித்தை அரையிறுதியில் இந்தியாவின் அங்கிதா - தீரஜ் இணை தோல்வி

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத் - தீரஜ் பொம்மதேவாரா ஜோடி வெண்கல பதக்க போட்டியில் அமெரிக்காவிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அங்கிதா - தீரஜ் இணை, இந்தோனேஷியாவின் தியானந்தா - ஆரிஃப் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் இந்திய ஜோடி 5-1 என்ற கணக்கில் (37-36, 38-38, 38-37) இந்தோனேஷிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அதன்பின், காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் எலியா கேனல்ஸ் மற்றும் பாப்லோ அச்சா ஜோடியை இந்திய இணை எதிர்கொண்டது.

முதல் செட்டை 38-37 என கைப்பற்றிய இந்திய இணை, இரண்டாவது செட்டை 38-38 என சமன் செய்தது. மூன்றாவது செட்டில் 37-36 என்ற கணக்கில் இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. பின்னர், இந்தியாவின் அங்கிதா - தீரஜ் ஜோடி 5-3 என்ற கணக்கில் ஸ்பெயின் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

அரையிறுதியில் தென்கொரியாவை எதிர்கொண்டது இந்திய இணை. தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் செட்டில் 38-36 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றது. இரண்டாவது செட்டில் 38-35 என்ற கணக்கில் தென் கொரியா வெற்றி பெற்றது. மூன்றாவது செட்டில் 38-36, 4-வது செட்டில் 39-38 என்ற கணக்கில் தென் கொரியாவின் கையே ஓங்கி இருந்தது. இதனால் 2-6 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வியைத் தழுவியது.

தொடர்ந்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடி அமெரிக்காவின் கேசி காஃப்ஹோல்ட் மற்றும் பிராடி எலிசன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் அமெரிக்க இணை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதில் 2-6 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்து வெண்கல பதக்க வாய்ப்பை தவறவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE