கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை 230 ரன்களைச் சேர்த்தது. இதில், இலங்கை வீரர் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 67 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது. கொழும்புவின் பிரேமதாச மைதானத்தின் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அவிஷ்க பெர்னாண்டோ - பத்தும் நிஸ்ஸங்கா இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
சிராஜ் வீசிய 3வது ஓவரில் பெர்னாண்டோ 1 ரன்னுக்கு விக்கெட்டானார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 14 ரன்களிலும், சதீர சமரவிக்ரமா 8 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 68 ரன்களைச் சேர்த்திருந்தது. அடுத்து வந்த சரித் அசலங்கா 14 ரன்களில் நிலைக்காமல் கிளம்பினார். நிலைத்து விளையாடி 54 ரன்களைச் சேர்த்த பத்தும் நிஸ்ஸங்கா 27-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டானார்.
ஜனித் லியனகே 20 ரன்களிலும், வனிந்து ஹசரங்கா 24 ரன்களிலும், அகில தனஞ்சயா 17 ரன்களிலும் அவுட்டாகி கிளம்பினர். துனித் வெல்லாலகே அதிரடியாக ஆடி 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டாகாமல் களத்தில் இருக்க. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 230 ரன்களை சேர்த்தது. இந்தியாவுக்கு 231 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» ஒலிம்பிக்கில் மனு பாகர் 3-வது பதக்கத்துக்கு ‘குறி’ - இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
» ஒலிம்பிக் வில்வித்தை: இந்தியாவின் அங்கிதா - தீரஜ் இணை காலிறுதிக்கு முன்னேற்றம்
இந்திய அணி தரப்பில் அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷிவம் துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.