ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3-வது பதக்கம்: துப்பாக்கிச் சுடுதலில் ஸ்வப்னில் வெண்கலம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது வெண்கலப் பதக்கம் இது.

50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். அவர் 451. 4 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார்.

ஸ்வப்னில் குசாலேவின் சிறப்பான சாதனை, இந்தியாவை பெருமைப்படுத்தியது மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் அவரது நிபுணத்துவத்தை எடுத்துரைத்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்ற பிறகு ஸ்வப்னிலின் தந்தை தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 41-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. 26-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறும். பிரான்ஸ் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE