பாரிஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவருக்கான இறுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா நூலிழையில் வெண்கலப் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். 208.4 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து வெளியேறினார்.
ஒலிம்பிக் தொடரின் இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவருக்கான தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட அவர், 630.1 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில், தொடக்கத்திலிருந்து அரஜுன் சிறப்பாகவே செயல்ப்பட்டார். அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் சற்று தடுமாற்றம் கண்டதால் நூலிழையில் பதக்கத்துக்கான வாய்ப்பை தவறவிட்டார்.
7-வது ரவுண்டில் குரோஷியாவின் மீரான் மரிசிச் 209.8 புள்ளிகள் பெற்றார். இதில் அர்ஜுன் பபுதா 208.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டார். இதனால் வெண்கலப் பதக்க வாய்ப்பு பறிபோனது. உலக சாதனை வீரரான சீனாவின் லிஹாவோ ஷெங் தங்கம் வென்றார். ஸ்வீடனைச் சேர்ந்த விக்டர் லிண்ட்கிரென் வெள்ளிப் பதக்கம் வென்றார். குரோஷியாவின் மிரான் மரிசிச் வெண்கலம் வென்றார். அர்ஜுன் புபுதா மொத்தமாக இதுவரை தன்னுடைய கரியரில் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.