மதுரை: இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில் எந்த அரசியலும் இல்லை என தமிழக வீரர் நடராஜன் கூறியுள்ளார்.
தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்திருந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "பாரம்பரிய கோயில் நகரமான மதுரைக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் தான் நான் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளேன். எனக்கு ஏற்பட்ட காயங்களால் தான் என்னால் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது. மற்றபடி இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில் எந்த அரசியலும் இல்லை.
இதுவரை அப்படி எந்த உணர்வும் எனக்கு ஏற்பட்டதே இல்லை. தமிழக கிரிக்கெட் வீரர்கள் ஏராளமானோர் ஐபிஎல் அணிக்கு தேர்வாவதற்கு காரணம், தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடர்தான். நானும் டிஎன்பிஎல் தொடரால்தான் தேர்வானேன். இத்தொடருக்கு ஆண்டுதோறும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதில் கிராமப் புற வீரர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் உடற்தகுதி மிக முக்கியம். கடினமாக உழைத்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்" என்று நடராஜன் கூறினார்.