“டி20 கிரிக்கெட்டில் எனது செயல்திறனை மேம்படுத்த ஆர்வமாக உள்ளேன்” - ஷுப்மன் கில்

By செய்திப்பிரிவு

டி20 கிரிக்கெட்டில் தனது பேட்டிங் சார்ந்த செயல்திறனை மேம்படுத்த விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் விளையாட உள்ளார்.

24 வயதான ஷுப்மன் கில், கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார். இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 505 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசினார். அது தவிர இன்னும் சில போட்டிகளில் ரன் எடுத்துள்ளார். 10 இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார். இந்த நிலையில் தான் டி20 கிரிக்கெட் செயல்திறன் குறித்து பேசியுள்ளார்.

அவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பிரதான அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அண்மையில் முடிந்த ஜிம்பாப்வே தொடரில் அணியை கேப்டனாக வழி நடத்தி இருந்தார்.“டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த பார்மெட்டில் எனது செயல்பாடு நான் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. இருந்தாலும் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக எப்படியும் 30 முதல் 40 டி20 சர்வதேச போட்டிகளில் நாங்கள் விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் எனது பேட்டிங் செயல்திறனை நிச்சயம் மேம்படுத்துவேன். ஒரு அணியாகவும் நாங்கள் முன்னேற்றம் காண விரும்புகிறோம்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் எனக்கு நல்ல புரிதல் உள்ளது. சில போட்டிகளில் இருவரும் இணைந்து ஆடி ரன் குவித்துள்ளோம். அதோடு வலது - இடது பேட்டிங் கூட்டணி நிச்சயம் பலன் தரும் என எதிர்பார்க்கிறேன்” என கில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE