பாரிஸில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய இலங்கை தமிழர்!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: 33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த சூழலில் பாரிஸில் ஒலிம்பிக் ஜோதியை இலங்கை தமிழரான தர்ஷன் செல்வராஜா ஏந்தினார்.

பிரான்ஸ் நாட்டில் சுமார் பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 400 நகரங்களில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் அங்கு நடைபெறுகிறது. அந்த பத்தாயிரம் பேரில் ஒருவராக இந்த வாய்ப்பை பெற்றார் தர்ஷன் செல்வராஜா.

இலங்கையை சேர்ந்த அவர் கடந்த 2006-ம் ஆண்டு பிரான்ஸ் வந்துள்ளார். தொழில்முறை செஃப். பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த பகெத் (Baguette) உருவாக்கத்துக்கான போட்டியில் அவர் முதலிடம் பிடித்தார். இதப் போட்டியில் 176 பேர் பங்கேற்றனர். இதில் வென்ற தர்ஷன் செல்வராஜாவுக்கு 4,000 யூரோக்கள் பரிசாக வழங்கப்பட்டது. இவர் தயார் செய்யும் பகெத் தான் பிரான்ஸ் அதிபர் மாளிகையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தது சர்ப்ரைஸ் என்றும், மிகவும் அதிர்ஷ்டம் கொண்டவராக கருதுவதாகவும் தர்ஷன் செல்வராஜா தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் ஜோதி கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது. அங்கிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு இந்த ஜோதி கொண்டுவரப்பட்டுள்ளது. நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE