இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்!

By செய்திப்பிரிவு

மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடருக்கு பின் இந்திய அணி இலங்கை சென்று தலா 3 டி20, ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. ஜூலை 27ல் முதல் டி20 தொடங்குகிறது. தொடர்ந்து மூன்று நாள்களில் (27,28,29) மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. இதன்பின் ஆகஸ்ட் 2, 4, 7ம் தேதிகளில் 50 ஓவர் போட்டிகள் நடக்கவுள்ளன.

ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் ஹர்திக் பாண்டியா இலங்கை செல்லும் இந்திய டி20 அணிக்கான கேப்டனாக செயல்படவுள்ளார். எனினும், ஹர்திக் பாண்டியா அதன்பின்னர் நடக்கும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்திக் விலகுகிறார் என்று அந்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி, “ஹர்திக் பாண்டியா டி20 போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்துவார். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகுகிறாரே தவிர, ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல், வேறு எந்த காரணமும் இல்லை. அவர் நல்ல உடல்தகுதியுடன் உள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE