கால்கரி: கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் உலகின் 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்செனை, இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் தோற்கடித்தார்.
கனடாவின் கால்கரி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்செனை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரியன்ஷு ரஜாவத் 21-11, 17-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள வீரரை பிரியன்ஷு ரஜாவத் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும். அரை இறுதி சுற்றில் பிரான்ஸின் அலெக்ஸ் லேனியருடன் பலப்பரீட்சை நடத்துகிறார் பிரியன்ஷு ரஜாவத். மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 18-21, 21-19, 16-21 என்ற செட் கணக்கில் போராடி சீன தைபேவின் பெய் ஷான், என்-ஸு ஹங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.