அமெரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி | T20 WC

By செய்திப்பிரிவு

நியூயார்க்: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்க அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ஷயான் ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இறங்கினர். இதில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே ஷயான் ஜஹாங்கீர் அவுட் ஆனதால் அமெரிக்க அணி ஆடிப் போனது.

இதனையடுத்து இறங்கிய ஆண்ட்ரீஸ் கவுஸ், அதே ஓவரின் ஆறாவது பந்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இப்படியாக முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டினார் அர்ஷ்தீப் சிங் .

அடுத்து இறங்கிய அணியின் கேப்டன் ஆரோன் ஜேம்ஸ் 22 ரன்களில் அனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா. தொடர்ந்து ஸ்டீவன் டெய்லர் 24 ரன்கள், நிதிஷ் குமார் 27 ரன்கள், கோரி ஆண்டர்சன் 15 ரன்கள், ஹர்மீத் சிங் 10 ரன்கள், ஷேட்லி வான் ஷால்விக் 11 ரன்கள் என 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களில் அமெரிக்க அணி சுருண்டது.

இதனையடுத்து 111 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இறங்கினர். இதில் விராட் கோலி இரண்டாவது பந்திலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ரோஹித் சர்மா 2வது ஓவரில் வெறும் 3 ரன்களுடன் கிளம்பினார்.

அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்கள் கொடுத்து வெளியேறினார். முக்கிய வீரர்களின் மோசமான ஆட்டத்தால் துவண்டு போயிருந்த இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே இருவரும் நிதானமாக ஆடி புத்துயிர் கொடுத்தனர்.

சூர்யகுமார் அரை சதம், துபே 31 ரன்கள் என 18.2 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE