அமெரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி? | T20 WC

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘ஏ’பிரிவில் உள்ள இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மட்டை வீச்சுக்கு கடும் சவாலாக திகழும் நசாவ் கவுண்டி மைதானத்தில் தொடர்ச்சியாக 3-வது ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. தொடர்ந்து பாகிஸ்தான்அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி கண்டது. இரு வெற்றிகளின் வாயிலாக 4 புள்ளிகள் பெற்றுள்ளஇந்திய அணி தனது பிரிவில்முதலிடத்தில் உள்ளது.

மோனங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக 194 ரன்கள் இலக்கை 14 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் தோற்கடித்தது. இருவெற்றிகளின் மூலம் 4 புள்ளிகளை பெற்றிருந்தாலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் அமெரிக்க அணி 2-வது இடத்தில் உள்ளது.

அறிமுக அணியான அமெரிக்கா தனது முதல் இருஆட்டங்களையும் மட்டை வீச்சுக்கு சாதகமான டல்லாஸ் மைதானத்தில் விளையாடி இருந்தது. இதில் கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆண்ட்ரிஸ் கவுஸ் 46 பந்துகளில், 65 ரன்களையும் ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ரன்களையும் விளாசிபெரிய அளவிலான இலக்கை எளிதாக அடைய உதவினர். அதேவேளையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆண்ட்ரிஸ் கவுஸ் 35 ரன்களையும் கேப்டன் மோனங்க் படேல் 50 ரன்களையும் விளாசி சிறப்பான பங்களிப்பை வழங்கிய நிலையில் ஆரோன் ஜோன்ஸ் 26 பந்துகளில் 36 ரன்கள் விளாசி ஆட்டத்தை டையில் முடிக்க பெரிதும் உதவினார். மேலும் சூப்பர் ஓவரிலும் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சவுரப் நேத்ராவால்கர், இடது கை சுழற்பந்து வீச்சாளரான நோஸ்துஷ் கென்ஜிகே ஆகியோர் கூட்டாக 5விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையை பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவிடாமல் கட்டுப்படுத்தினர். மேலும் சூப்பர்ஓவரில் நேத்ராவால்கர் அற்புதமாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை வெற்றிபெறவிடாமல் முடக்கினார்.

மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹர்மீத் சிங், வேகப்பந்து வீச்சாளர் அலிகான் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களாக திகழ்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான நோஸ்துஷ் கென்ஜிகே, ஹர்மீத் சிங் ஆகியோர் ரிஷப் பந்த்துக்கு சவால்தரக்கூடும். அதேவேளையில் தொடக்க ஓவர்களில் நேத்ராவால்கர் இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குஅழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருந்தாலும் இந்திய அணி ஆடுகளத்தின் தன்மையை கருதி இன்றைய ஆட்டத்தில் டாஸில் வெற்றி பெற்றால் பந்து வீச்சையே தேர்வு செய்யக்கூடும். ஏனெனில் நசாவ் கவுண்டிமைதானம் முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. இதை பயன்படுத்தி எதிரணியை 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதில் இந்திய அணி கவனம் செலுத்தக்கூடும். ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒரு முறை உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தனதுகடைசி 7விக்கெட்களை 28ரன்களுக்கு கொத்தாக தாரைவார்த்திருந்தது. இந்த மைதானத்தில் நிதானமாக விளையாடினால் மட்டுமே சீராக ரன்கள் சேர்க்க முடியும் என்பதால் இந்திய அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் மிகுந்த கவனமுடன் மட்டை வீசக்கூடும். மேலும் அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

அநேகமாக ஷிவம் துபே நீக்கப்பட்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்படக்கூடும். மேலும்யுவேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஷிவம் துபேபேட்டிங்குக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார். மித வேகப்பந்து வீச்சாளரான அவரை பந்து வீச்சில் கேப்டன் ரோஹித் சர்மா பயன்படுத்துவது இல்லை.மேலும் பாகிஸ்தான் அணிக்குஎதிரான ஆட்டத்தில் நெருக்கடியான நேரத்தில் ஷிவம்துபே3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இது ஒருபுறம் இருக்க பேட்டிங்குக்கு கடும் சவலாக திகழும் நசாவ் கவுண்டி மைதானத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் சேர்க்கை இன்றைய ஆட்டத்தில் பரிசோதித்து பார்க்கப்படக்கூடும். அந்தவகையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இது நிகழ்ந்தால் விராட் கோலி 3-வது வீரராக விளையாடக்கூடும்.

மேலும் இந்திய அணி அடுத்த சுற்று ஆட்டங்களை மேற்கு இந்தியத் தீவுகளில் விளையாட உள்ளது. அங்கு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் உள்ளன. இதனால் சாஹல் மற்றும் குல்தீப்ஆகியோருக்கு போதுமான ஆட்ட நேரம் தேவை. இதைகருத்தில் கொண்டு இன்றைய ஆட்டத்திலும் கடைசி லீக் ஆட்டத்திலும் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.

‘பலநாட்டு கலவை’ - அமெரிக்க கிரிக்கெட் அணியானது பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களின் கலவையாக திகழ்கிறது. அந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 8 பேர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் இடம்பெற்று உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE