இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை | T20 WC

By செய்திப்பிரிவு

நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் `ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

இதனிடையே இந்திய அணி 2-வது போட்டியில் பாகிஸ்தானை இன்று (9-ம் தேதி) எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியிடம், பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா என பலம் வாய்ந்ததாக உள்ளது. முதல் ஆட்டத்தில் கேப்டன் ரோஹித்தும், ரிஷப் பந்த்தும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை எளிதாக்கினர். எனவே இன்றைய ஆட்டத்திலும் அவர்களிடமிருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங்,
முகமது சிராஜ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் எதிரணி வீரர்களை அச்சுறுத்தக் காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்யும் ஆர்வத்தில் களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வலுவாக இருந்தும் முதல் ஆட்டத்தில் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம், ஷதாப் அகமது, இப்திகார் அகமது ஷாகின் ஷா அப்ரிடி ஆகியோர் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினர். அவர்களிடமிருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் இன்றைய ஆட்டத்தில் வெளிப்படக்கூடும். அதேபோல் பவுலிங்கில் முகமது அமிர், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் ஆகியோர் முத்திரை பதிக்கக் காத்திருக்கின்றனர்.

இந்த ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான ஆட்டமாக உள்ளது. ஒருவேளை இந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியுறும் பட்சத்தில் அந்த அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கடினமாகிவிடும். கடைசியாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதி இருந்தன. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

வழக்கமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால் பெரிய அளவில்
எதிர்பார்ப்பு இருக்கும். உலகக் கோப்பை போட்டி என்பதால் இந்தப் போட்டிக்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மே.இ.தீவுகள் - உகாண்டா மோதல் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள், உகாண்டா அணிகள் மோத உள்ளன. இது இன்று காலை 6 மணிக்கு கயானாவில் நடைபெறவுள்ளது. இரவு 10.30 மணிக்கு ஆன்டிகுவாவில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE