T20 WC | இந்திய வீரர்கள் 25-ம் தேதி நியூயார்க் பயணம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 2-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலான வீரர்கள் வரும் 25-ம் தேதி நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக இந்திய அணியில் உள்ள ஒரு பகுதியினர் வரும் 21-ம் தேதி நியூயார்க் புறப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்திய அணி ஒரே ஒருபயிற்சி ஆட்டத்தில் மட்டுமே (வங்கதேச அணிக்கு எதிராக ஜூன் 1-ம் தேதி) பங்கேற்கிறது.

இதனால் இந்திய அணி வீரர்கள்புறப்படும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரும் 25-ம் தேதி ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் உள்ளிட்டோருடன் பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் நியூயார்க் புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடும் மற்ற இந்திய அணி வீரர்கள் 27-ம் தேதி நியூயார்க் புறப்படுவார்கள் என தெரிகிறது. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் மோதுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE