MI vs LSG | ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யுமா மும்பை இந்தியன்ஸ்?

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 9 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 10 அணிகள் கலந்து கொண்டுள்ள தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை எப்போதோ இழந்துவிட்ட மும்பை இந்தியன்ஸ் இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடும்.

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் அதிக அளவிலான ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு மிகவும் மங்கலாகவே இருக்கும். தொடர்ச்சியாக அடைந்த 3 தோல்விகளால் லக்னோ அணி புள்ளிகளை பெற முடியாமல் போனதோடு மட்டும் அல்லாமல், நிகர ரன் விகிதத்தையும் வெகுவாக இழந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது, வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஆகியவை லக்னோ அணியின் பிளே ஆஃப் சுற்று கனவை சிதைத்தது.

அறிமுகமான சீசனிலும், கடந்த சீசனிலும் தொடர்ச்சியாக இரு முறை பிளே ஆஃப் சுற்றில் நுழைந்திருந்த லக்னோ அணி முதன் முறையாக தற்போது லீக் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. -0.787 நிகர ரன் ரேட் வைத்துள்ள லக்னோ அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் அந்த அணியின் நிகர ரன் ரேட் பெரிய அளவில் மேம்படாது. ஏனெனில் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிகர ரன் ரேட் 0.387 ஆக உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்திருந்தது. தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் எதிர்வினைகளை ஏற்படுத்தியது, இதுவும் மும்பை அணியின் மோசமான செயல் திறனுக்கு ஒரு காரணமாக அமைந்தது. இது ஒருபுறம் இருக்க ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ், கேப்டனுக்கு பின்னால் நிற்க தவறிவிட்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் பேட்டிங்கில் ஒருங்கிணைந்த செயல் திறன் வெளிப்படவில்லை. பந்து வீச்சில் 20 விக்கெட்களை வேட்டையாடிய ஜஸ்பிரீத் பும்ராவுக்கு உறுதுணையாக மற்ற பந்து வீச்சாளர்கள் கைகொடுக்கவில்லை. ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக அணிக்கு எந்த வகையிலும் பலம் சேர்க்கவில்லை. ரோஹித் சர்மா கடந்த 6 ஆட்டங்களில் குறைந்தரன்களில் வெளியேறினார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 19 ஆக உள்ளது. டி 20 உலகக் கோப்பை நெருங்குவதால் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து துறையிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் சொந்த மைதானத்தில் கடைசி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE