நம்ப முடியாத ஆட்டத்தை ஹெட், அபிஷேக் வெளிப்படுத்தினர்: ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. முதலில் விளையாடிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதனால் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 167 ரன்களைக் குவித்து மகத்தான வெற்றியைப் பெற்றது. அபிஷேக் சர்மா 75 ரன்களும், (28 பந்துகள், 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள்), டிராவிஸ் ஹெட் 89 ரன்களும் (30 பந்துகள், 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

இதுகுறித்து ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது: இந்த ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் நம்ப முடியாத அளவுக்கு விளையாடினர். இந்த ஆட்டத்தின்போது அவர்களுக்கு எந்தவித அறிவுறுத்தலையும் நாங்கள் வழங்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாகவே டிராவிஸ் ஹெட் இந்த விதத்தில்தான் விளையாடி வருகிறார். கடினமான பந்துகளைக் கூட அவர் விளாசி விடுகிறார். அதேபோல் சுழற்பந்து வீச்சானாலும் சரி, வேகப்பந்து வீச்சானாலும் சரி அபிஷேக் சர்மா அபாரமாக விளையாடுகிறார். அவரது பேட்டிங் ஸ்டைல் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE