ஆயுஷ் பதோனி பொறுப்பான ஆட்டம்: டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

By செய்திப்பிரிவு

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 167 ரன்களைச் சேர்த்துள்ளது.

லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங்கை தேர்வு செய்தது. குயின்டன் டி காக் - கே.எல்.ராகுல் ஓப்பனர்களாக களமிறங்கினர். 3-வது ஓவரை வீசிய கலீல் அகமது பந்தில் குயின்டன் டி காக் 19 ரன்களில் எல்பிடபள்யூ ஆனார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 5வது ஓவரில் கலீல் அகமது வீசிய பந்தில் அதேபோல எல்பிடபள்யூ ஆனது ஆச்சரியம். 3 ரன்களில் கிளம்பினார்.

அவர்களைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களில் விக்கெட் ஆனதும், அதேஓவரில் அடுத்து நிக்கோலஸ் பூரன் டக்அவுட் ஆனதும் லக்னோவுக்கு நிகழ்ந்த சோகம். போராடிக்கொண்டிருந்த கே.எல்.ராகுலும் 39 ரன்களில் அவுட்டாக 10 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்த லக்னோ 80 ரன்களை சேர்த்திருந்தது.

ஆயுஷ் பதோனி - தீபக் ஹூடா இணைந்து கள நிலவரத்தை மாற்றுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்க, தீபக் ஹூடா 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் ஆயுஷ் பதோனி பொறுப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக நிற்காமல் க்ருணால் பாண்டியா 3 ரன்களில் விக்கெட்டானார்.

அடுத்து வந்த அர்ஷத் கான் நிதானத்தை கடைப்பிடித்து துணை நிற்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 167 ரன்களைச் சேர்த்தது. ஆயுஷ் பதோனி 55 ரன்களுடனும், அர்ஷத் கான் 20 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, முகேஷ்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE