மும்பை: இந்திய அணிக்காக உலகக் கோப்பை வென்று கொடுக்க விரும்புவதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்வு ஒன்றில் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சீனியர் வீரராக அவர் விளையாடி வருகிறார்.
“இப்போதைக்கு நான் சிறப்பாகவே விளையாடி வருகிறேன். அதனால் அடுத்த சில ஆண்டுகள் இதனை தொடர விரும்புகிறேன். அணிக்காக உலகக் கோப்பை வெல்ல விரும்புகிறேன். 2025-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி விளையாடும் என நம்புகிறேன்.
நான் 50 ஓவர் உலகக் கோப்பை பார்த்து வளர்ந்தவன். எங்களுக்கு அது தான் அசல் உலகக் கோப்பை. இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு சிறந்த நாளாக அமைந்தது. நாங்கள் மோசமான கிரிக்கெட் ஆடவில்லை. சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. எங்களை விட அன்றைய தினம் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்” என ரோகித் தெரிவித்துள்ளார்.
» “திமுக ஆட்சியில் அதிகார மையங்களாக நால்வர்...” - எடப்பாடி பழனிசாமி @ நாமக்கல்
» மழையில் கரைந்த மூதாட்டியின் மண் வீடு - ஓர் ஆண்டாக கழிவறையே அடைக்கலம் @ மேற்கு வங்கம்
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 36 வயதான ரோகித் சர்மா, இந்திய அணிக்காக 472 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என மொத்தமாக 18,820 ரன்கள் குவித்துள்ளார்.