“எப்போதுமே சிறந்த நாளாக அமையாது” - அஸ்வினை ஆதரித்த சங்கக்காரா

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: கடந்த புதன்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணி நடப்பு ஐபிஎல் சீசனில் எதிர்கொள்ளும் முதல் தோல்வி இது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 40 ரன்களை கொடுத்திருந்தார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அந்த அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா பேசியுள்ளார்.

ராஜஸ்தானுக்கு எதிராக 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் அணி விரட்டியது. இதில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது குஜராத். அந்த அணியின் வீரர் ரஷித் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 17-வது ஓவரில் மட்டும் 17 ரன்கள் எடுத்தது குஜராத்.

“தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் அஸ்வின். எப்போதுமே சிறந்த நாளாக அமையாது. எப்போதாவது ஒருநாள் களத்தில் மோசமான நாளாக அமையும். அவர் மிக கடுமையாக போட்டி அளிக்கும் திறன் கொண்ட வீரர். அவர் வலுவாக கம்பேக் கொடுப்பார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என சங்கக்காரா தெரிவித்தார்.

37 வயதான அஸ்வின், கடந்த 2022 சீசன் முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 35 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்கள் மற்றும் 303 ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன்னர் சென்னை, டெல்லி, புனே, பஞ்சாப் போன்ற அணிகளுக்காக அஸ்வின் விளையாடி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE