வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி

By செய்திப்பிரிவு

சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி டெஸ்ட் தொடரை முழுமையாக 2-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

சட்டோகிராமில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 531 ரன்களும், வங்கதேசம் 178 ரன்களும் எடுத்தன. 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து 511 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது.

நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 85 ஓவர்களில் 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மெஹிதி ஹசன் மிராஸ் 81 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் லகிரு குமரா 4, கமிந்து மெண்டிஸ் 3, பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக கமிந்து மெண்டிஸ் தேர்வானார். அவர், இந்தத் தொடரில் 367 ரன்கள் குவித்த நிலையில் பந்து வீச்சில் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE