சென்னை: நேபாளம் அட்யா பாட்யா கூட்டமைப்பு சார்பில் முதலாவது ஆசிய அட்யா பாட்யா சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மார்ச் 28 முதல் 31-ம் தேதி வரை காத்மாண்டுவில் நடைபெற்றது. இதில் நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் பங்கேற்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக் முறையில் நடத்தப்பட்டன.
இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 32-21,28-20 என்ற நேர் செட் கணக்கில் பூடான் அணியை வீழ்த்தியது. மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 23-17, 26-19 என்ற நேர் செட்டில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த தொடரில் பங்கேற்ற இந்திய ஆடவர் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் இடம் பெற்றிருந்தார். மகளிர் அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி, ஸ்ரீமதி ஆகியோர் விளையாடி இருந்தனர்.