ராஞ்சி: ராஞ்சியில் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் ஆகாஷ் தீப்பின் பயணம் கடினமானது. ஆகாஷ் தீப்பின் தாயார் லதுமா தேவி இல்லையெனில் ஆகாஷ் தீப் என்றொரு வேகப்பந்து வீச்சாளர் இன்று இந்திய அணிக்குக் கிடைத்திருக்க மாட்டார்.
ராஞ்சியில் முதல் நாள் ஃபிளாட் பிட்சில் இங்கிலாந்தின் முதல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் ஆகாஷ். பந்துகள் மிகத்துல்லியமாக ஸ்விங் ஆனது. மணிக்கு 138-140 கிமீ வேகம் என்ற போதிய வேகம் கொண்டுள்ளார். அட்டகாசமான லெந்த், பந்தின் தையலை சரியாக நிலை நிறுத்துவது என்று ஆகாஷ் தீப்பின் சாதக அம்சங்கள் பாராட்டப்பட்டு வருகின்றன.
ஆகாஷ் தீப் கிரிக்கெட்டுகு வந்ததே பெரிய விஷயம். அவர் ஊரில் கிரிக்கெட் ஆடினால் உருப்படமாமல் போய் விடுவார்கள் என்று கூறுவார்களாம். கிரிக்கெட்டுக்கு அங்கு ஆதரவு கிடையாது. இந்நிலையில் இவரது தாயார் ஆகாஷ் தீப்பிற்கு பெரிய ஆதாரமாக, தூணாக இருந்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஆகாஷ் தீப் தாயார் லதுமா தேவி அளித்த பேட்டியில் ஆகாஷ் தீப்பை கிரிக்கெட்டுக்குள் எப்படி கொண்டு வந்தார் என்பதைப் பேசியுள்ளார்:
» “இந்த பிட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” - பஷீர் சொல்லும் வெற்றி வாய்ப்புகள்
» கோல் பதிவு செய்த விர்ஜில் வான் டைக்: லீக் கோப்பையை வென்ற லிவர்பூல்
“ஆகாஷ் தீப்பின் தந்தை இவனை ஒரு அரசு அதிகாரியாக வேண்டுமென்றுதான் விரும்பினார். ஆனால் ஆகாஷுக்கு கிரிக்கெட் மீதுதான் உண்மையான பற்றுதல். இந்தக் குற்றத்தில் நானும் ஆகாஷ் தீப்பின் கூட்டாளிதான். நான் அவனை ரகசியமாக, ஒருவருக்கும் தெரியாமல் கிரிக்கெட் ஆட அனுப்பி வைத்து அவனது கனவு நிறைவேற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்படித்தான் செய்தேன்.
நாங்கள் இருந்த ஊரில் கிரிக்கெட் பற்றி அனைவரும் சொல்வது இதுதான், ‘அவன் உருப்படமாட்டான், எதற்கும் உதவாமால் உதவாக்கரையாகி விடுவான்’ என்பதுதான் அந்த ஊரில் கிரிக்கெட் ஆடுபவர்களை சொல்வார்கள். ஆனால் எனக்கு என் மகன் நன்றாக விளையாடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவன் கனவை நிறைவேற்றுவதை நோக்கி அவன் செல்ல உதவினோம். 6 மாதகால இடைவெளியில் என் கணவரையும் பெரிய மகனையும் இழந்தாலும் ஆகாஷ் தீப் கிரிக்கெட் கனவு பாழாகிவிடக்கூடாது என்று உளமாற நினைத்தேன்.’ என்றார் ஆகாஷ் தீப்பின் தாய்.
மகன் அரசு அதிகாரியாக வேண்டும் என்று தந்தை நினைத்தாலும், வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல நிலைக்கு ஆகாஷ் வரவேண்டும் என்பதில் அவர் தந்தை தீவிரமாக இருந்திருக்கிறார். ஆனால் இயற்கையின் கோர நாடகம், மகன் இந்தியாவுக்காக ஆடுவதைப் பார்க்க அவர் இல்லை.
எனவேதான் ஆகாஷ் தீப் அறிமுக டெஸ்ட் போட்டியைப்பற்றி உணர்ச்சிவயப்பட்டு கூறும்போது, “இது எனக்கு உணர்வுபூர்வமான தருணம். நான் கிரிக்கெட் ஆடவே வீட்டை விட்டு கிளம்பினேன். பெங்கால் எனக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுத்தது. எனக்கு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமைந்தது. நான் அவர்களுடன் ரஞ்சி போட்டிகளில் ஆடினேன். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் என் குடும்பம் பெரிய அர்ப்பணிப்பைச் செய்துள்ளது ” என்று கூறி தந்தைக்கு தன் டெஸ்ட் அறிமுகத் தருணத்தை அர்ப்பணித்தார்.