உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் அதிர்ச்சி தோல்வி

By செய்திப்பிரிவு

பூசான்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர்,மகளிர் அணியினர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில் நாக் அவுட் சுற்றில் இந்திய ஆடவர் அணி, கஜகஸ்தானுடன் மோதியது. இதில் இந்தியஆடவர் அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியஆடவர் அணி பலம் வாய்ந்த தென் கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய ஆடவர் அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஹர்மீத் தேசாய் 10-12, 11-13, 7-11என்ற செட் கணக்கில் ஜங் வூஜினிடமும், சரத் கமல் 9-11, 5-11, 11-8,4-11 என்ற கணக்கில் லிம் ஜாங்ஹூனிடமும், ஜி.சத்தியன் 5-11, 8-11, 2-11 என்ற கணக்கில் லீ சங் சுவிடமும் தோல்வி அடைந்தனர். இதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்திய மகளிர் அணி தனது நாக் அவுட் சுற்றில் இத்தாலியுடன் மோதியது. இதில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

இதையடுத்து நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மகளிர் அணி பலம் வாய்ந்த சீன தைபேவுடன் மோதியது. இதில் இந்திய அணி மகளிர் அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா 11-8, 8-11, 4-11, 11-9, 11-9 என்ற செட் கணக்கில் சென் ஸு யுவை வீழ்த்தினார். ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் இந்திய வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர்.

ஸ்ரீஜா அகுலா 6-11, 9-11, 5-11 என்ற கணக்கில் ஷெங் ஐ-ஷிங்கிடமும், அய்ஹிகா முகர்ஜி 10-11, 13-15, 11-9, 2-11 என்ற செட் கணக்கில் லி யு ஜுனிடமும், மணிகா பத்ரா 10-12, 11-5, 9-11, 5-11 என்ற செட் கணக்கில் ஷெங்ஐ-ஷிங்கிடமும் தோல்வியை சந்தித்தனர்.

இந்த தொடரில் கால் இறுதிக்குள் நுழையும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இந்திய ஆடவர், மகளிர் அணிகள் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறி உள்ள போதிலும் நாக் அவுட் சுற்றைகடந்து சிறப்பாக செயல்பட்டதால் உலக தரவரிசையில் சீரான முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது.தற்போதைக்கு உலகத் தரவரிசையில் இந்திய ஆடவர் அணி 15-வது இடத்திலும், இந்திய மகளிர் அணி 17-வது இடத்திலும் உள்ளன.

மார்ச் 5ம் தேதி உலகத் தரவரிசைஅட்டவணை புதுப்பிக்கப்படும். அப்போது உலக சாம்பியன்ஷிப்பில் சேர்த்த புள்ளிகள் கணக்கிடப்படும். அந்த வகையில் இந்திய அணிகள்பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி வெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக டேபிள் டென்னிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE