விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தனர்.
ரோஹித் சர்மா 41 பந்துகளில், 14 ரன்கள் எடுத்த நிலையில் சோயிப் பஷீர் பந்தில் பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் நின்ற ஆலி போப்பிடம் எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரோஹித் சர்மா 17.3 ஓவர்களில் 40 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் 46 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 49 ரன் சேர்த்தது.
தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார். மட்டையை சுழற்றிய ஜெய்ஸ்வால் டாம் ஹார்ட்லி வீசிய 49-வது ஓவரின் 3வது பந்தை சிக்ஸருக்கு விளாசி தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்தை அவர், 151 பந்துகளில், 11பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் கடந்தார். சீராக ரன்கள் சேர்த்த ஸ்ரேயஸ் ஐயர் 59 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் டாம் ஹார்ட்லி பந்தில் பென் ஃபோக்ஸிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 131 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்தது.
» “பிரதமர் மோடியை சந்திக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது” - ரோஹன் போபண்ணா ட்வீட்
» IND vs ENG 2வது டெஸ்ட் | ஜெய்ஸ்வால் அபார சதம் - முதல் நாள் முடிவில் இந்தியா 336/6
இதன் பின்னர் களமிறங்கிய ரஜத் பட்டிதார் 72 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள்எடுத்த நிலையில் ரெஹான் அகமது பந்தை தடுத்தாடியபோது போல்டானார். தொடர்ந்து அக்சர் படேல் 51 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களும், கர் பரத் 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது.
ஜெய்ஸ்வால் 257 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 179 ரன்களும் அஸ்வின் 5 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் சோயிப் பஷீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள்ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது இந்திய அணி.
ஜெய்ஸ்வால் இரட்டை சதம்: ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஜெய்ஸ்வால் 18 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் தனது இரட்டை சதத்தை விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளம் இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். 209 ரன்களில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, இதன்பின் வந்தவர்கள் விரைவாகவே விக்கெட்டை இழந்தனர். இதனால், 112 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், சோயிப் பஷீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.