டெல்லி: “என் தாயாரின் உடல்நிலை குறித்து பரவி வரும் எந்த தகவலும் உண்மையில்லை” என்று விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. இவர் தற்போது நடைபெற்றுவரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட்டுக்கான அணியிலும் விராட் கோலி இடம்பெறவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று மட்டும் பிசிசிஐ தெரிவித்தது.
ஆனால், விராட் கோலியின் தாயார் நிலை சரியில்லை என்றும், அதன் காரணமாகவே அவர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்தச் செய்திகள் தொடர்பாக விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
விகாஷ் கோலி வெளியிட்டுள்ள பதிவில் “என் தாயாரின் உடல்நிலை குறித்து பரவி வரும் எந்த தகவலும் உண்மையில்லை. எங்கள் தாயார் நலமாக உள்ளார். எனவே, யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.