“ஷோயப் மாலிக் உடனான பந்தம் முறிவு” - விவாகரத்தை உறுதி செய்து சானியா தரப்பில் விளக்கம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் மாலிக் உடனான திருமண பந்தம் முறிந்துள்ளதாக சொல்லி இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தரப்பில் விவாகரத்து குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர் சானியா மிர்சா. இவரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஷோயப் மாலிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 5 வயதில் இஷான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், தற்போது மூன்றவதாக நடிகை ஒருவரை ஷோயப் மாலிக் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர், சானியா மிர்சாவை சட்டப்படி விவாகரத்து செய்தாரா அல்லது தலாக் முறைப்படி விவாகரத்து கொடுத்தாரா என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

“பொது வெளியின் பார்வைக்கு கொண்டு வராத வகையில் தனது தனிப்பட்ட வாழ்க்கையை இதுவரை சானியா காத்து வருகிறார். இருப்பினும் ஷோயப் மாலிக் உடனான அவரது திருமண பந்தம் முறிவுக்கு வந்தது குறித்தும், இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றதையும் தெரிவிக்க வேண்டிய நிலை தற்போது எழுந்துள்ளது. ஷோயப்பின் புதிய வாழ்க்கை பயணம் சிறப்பானதாக அமைய வேண்டும் என சானியா விரும்புகிறார்.

இந்த நேரத்தில் ரசிகர்களும், நலம் விரும்பிகளும் அவரது பிரைவசிக்கு மதிப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என சானியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE