கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு | தமிழக கபடி அணிகள் வெற்றி: அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு கபடிபோட்டியில் தமிழ்நாட்டின் ஆடவர், மகளிர் அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தன. இதன் மூலம் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இரு அணிகளும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற கபடி போட்டியில் குரூப் ‘ஏ’-ல் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு மகளிர் அணி தெலங்கானாவை எதிர்த்து விளையாடியது. இதில் ஆதிக்கம் செலுத்திய தமிழ்நாடு மகளிர் அணி 78-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அதேவேளையில் ஆடவருக்கான கபடி போட்டியில் தமிழ்நாடு அணி 46-31 என்ற புள்ளிகள் கணக்கில் சண்டிகரை வென்றது.

தமிழ்நாடு ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்களான ஹரியாணாவிடம் தோல்வி அடைந்திருந்தன. அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய தமிழ்நாடு அணிகள் சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்தன.

மைதானம் முழுவதும் ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில் தெலங்கானாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு மகளிர் அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இதனால் முதல் பாதி ஆட்டத்திலேயே தெலங்கானா அணியை 8 முறை ஆல் அவுட் செய்ததுடன், 5 போனஸ் புள்ளிகளுடன் 45 புள்ளிகளை குவித்தது தமிழ்நாடு மகளிர் அணி.அதேவேளையில் தெலங்கானா அணியால் 4 புள்ளிகள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

2-வது பாதி ஆட்டத்திலும் தமிழ்நாடு மகளிர் அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தெலங்கானா அணிக்கு போராடுவதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், அந்த அணி மேலும் 6 முறை ஆல் அவுட்ஆனது. தமிழ்நாடு மகளிர் அணி தனது கடைசிலீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மகாராஷ்டிராவுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில்வெற்றி பெறும் அணி ‘ஏ’ பிரிவில் இருந்து 2-வதுஅணியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

இதே பிரிவில் இருந்து ஹரியாணா அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் 45-40 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிராவை வீழ்த்தியது.

ஆடவர் பிரிவில் சண்டிகர் அணிக்கு எதிரானஆட்டத்தை தமிழ்நாடு அணி வலுவாக தொடங்கியதால் முதல் பாதி ஆட்டத்தில் 20-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டத்தில் சண்டிகர் அணி போராடிய போதிலும் தோல்வியை தவிர்க்க முடியாமல் போனது. தமிழ்நாடு ஆடவர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று டெல்லி அணியுடன் மோதுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE