அனைத்து கிரிக்கெட் அணிகளும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்: டிவில்லியர்ஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஜோகன்னஸ்பர்க்: அனைத்து கிரிக்கெட் அணிகளும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக டிவில்லியர்ஸ் தனது யூடியூப் பக்கத்தில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்ற 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இல்லாதது வருத்தமளிக்கிறது. உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளின் மீதுதான் நீங்கள் பழிசுமத்த வேண்டியுள்ளது.

இந்த விஷயத்தில் எனக்கு யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ தவறாக உள்ளது என்று மட்டும் கூறுவேன்.

டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணி எது என்று தெரிய வேண்டுமென்றால் அனைத்து அணிகளும் தங்களுக்குள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற மன நிலைக்கு அணிகள் வரவேண்டும்.

உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் ஆபத்தான நிலையில் உள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்த டி20 லீக் போட்டிகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த டி20 லீக் போட்டிகளால் அதிக அளவிலான ஊதியம் அவர்களுக்கு கிடைக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் தங்களது மற்றும் குடும்பத்தின் எதிர்காலத்தை பார்ப்பதால் அவர்களை குறை கூறவும் முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE