“கேண்டீஸ்... எனக்கு உலகமே நீதான்!” - ஓய்வு தருணத்தில் மனைவியை சிலாகித்த வார்னர்

By செய்திப்பிரிவு

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். தனது கடைசி போட்டிக்கு பின் தனது மனைவி குறித்து உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார் வார்னர்.

தற்போதைய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். இன்று பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி போட்டியே டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னருக்கும் கடைசி போட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்டார். கடைசி இன்னிங்ஸில் அபார அரைசதம் விளாசி வெற்றியுடன் விடைபெற்றுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓப்பனிங் வீரராக அறியப்படும் டேவிட் வார்னர் கடைசி போட்டிக்கு பின் மிக உருக்கமாக பேசினார். குறிப்பாக தனது குடும்பம் குறித்து பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

கடைசி டெஸ்ட் என்பதாலும், சொந்த மைதானத்தில் விளையாடுவதாலும் இந்தப் போட்டி முழுவதும் வார்னரின் மனைவி, குழந்தைகள் உட்பட அவரின் குடும்பத்தினர் அனைவரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். போட்டிக்கு பின் பேசிய வார்னர், "நம் வாழ்க்கையின் பெரும்பகுதியில் குடும்பத்தினர் ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. சிறந்த வாழ்க்கையை பெற, என்னை சிறப்பாக வளர்த்த என் பெற்றோருக்கு நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். எனது சகோதரர் ஸ்டீவ், அவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியே இந்த நிலையை எட்டினேன்.

அடுத்து என் மனைவி கேண்டீஸ்... எங்களுக்கென ஓர் அழகான குடும்பம். குடும்பத்துடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசிக்கிறேன். என் மரணம் வரை அந்த நேசம் தொடரும். இதற்கு மேல் பேச வேண்டாம், ஏனென்றால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன். ஆனால், கேண்டீஸ்... உலகம் என்றால் நீதான் எனது அர்த்தம். குடும்பத்துக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதாலேயே ஓய்வு முடிவு எடுத்தேன்" என்று உருக்கமாக பேசினார்.

கடந்த ஏப்ரல் 2015ல் கேண்டீஸை கரம்பிடித்தார் டேவிட் வார்னர். இந்த தம்பதிகளுக்கு ஐவி, இண்டி மற்றும் இஸ்லா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். வார்னரும் அவரது மனைவி, மகள்களும் கிரிக்கெட்டை தாண்டி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக இணையவாசிகள் மத்தியில் குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் வெகு பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE