SA vs IND 2nd Test | தென் ஆப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா!

By செய்திப்பிரிவு

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 1 - 1 என்று சமன் செய்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் 79 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 28 ரன்கள் எடுத்து விக்கெட்டானார். ஷுப்மன் கில் 10 ரன்களில் வீழ்ந்தாலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து அணியை வெற்றிபெற முயற்சித்தனர். ஆனால், 12 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி எதிர்பாராத விதமாக கேட்ச் ஆனார். எனினும், ஷ்ரேயாஷ் ஐயர் பவுண்டரி அடித்து வெற்றிபெறவைத்தார்.

சிறிய இலக்கு என்பதால் இந்திய வீரர்கள் டி20 பாணியில் பவுண்டரிகளை விளாசி விரைவாகவே இலக்கை நோக்கி நகர்ந்தனர். இதனால், 12 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 80 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. ரோகித் சர்மா 17 ரன்கள் எடுத்திருந்தார். முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி கண்டிருந்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 1 - 1 என்று சமன் செய்தது.

முன்னதாக, கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது சிராஜின் சீரான வேகம், துல்லியம், ஸ்விங் ஆகியவற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது சிராஜ் 9 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 15 ரன்களை வழங்கி 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா 8 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 25 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும், முகேஷ் குமார் 2.2 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் ரன் ஏதும் கொடுக்காமல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 34.5 ஓவரில் 153 ரன்களுடன் சுருண்டது. ரபாடா வீசிய 3வது ஓவரில் போல்டானார் யஷஸ்வி. 15-வது ஓவரில் நந்த்ரே பர்கர் வீசிய பந்தில் ரோகித் சர்மா 39 ரன்களில் விக்கெட்டானார். 21-வது ஓவர் வரை தாக்குப்பிடித்த சுப்மன் கில் நந்த்ரே பர்கரின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 36 ரன்களில் கிளம்பினார். விராட் கோலி மட்டும் ஒருபுறம் நிலைத்து ஆட, மறுபுறம் வந்த ஸ்ரேயாஸ் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்ப, 33வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 153 ரன்கள் சேர்த்திருந்தது.

அடுத்து லுங்கி இங்கிடி வீசிய 34வது ஓவரில், கே.எல்.ராகுல் 8 ரன்களுடனும், ஜடேஜா, பும்ரா டக்அவுட்டாக ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி. அத்துடன் ரன் எதுவும் இல்லாமல் மெய்டன் ஆனது அந்த ஓவர். அடுத்த ஓவரில் விராட் கோலி 46 ரன்களில் அவுட்டாக, தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அடுத்தடுத்து டக் அவுட்டாக 34.5 ஓவரில் 153 ரன்களுடன் சுருண்டது இந்திய அணி. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களைச் சேர்த்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி பும்ராவின் பந்துவீச்சில் ஒருபுறம் விக்கெட்களை இழந்தாலும், மறுபுறம் ஐடன் மார்க்ரம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அதிரடியாக விளையாடி சதம் பதிவு செய்தார்.

ஓப்பனிங் இறங்கி செஞ்சூரி அடித்து 106 ரன்கள் எடுத்திருந்த மார்க்ரமின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். இறுதியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி 36.5 ஓவர்களுக்கு 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட், முகேஷ் குமார் 2 விக்கெட், பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி 78 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து இந்திய அணிக்கு 79 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின், 12 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 80 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE