ஐபிஎல் 2024 | மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்

By செய்திப்பிரிவு

மும்பை: 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பாடுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார் ரோகித் சர்மா. அவர் தலைமையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்நிலையில், தற்போது ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015 முதல் 2021 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்த ஹர்திக் பாண்டியா கடந்த 2022-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார். அங்கே அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. அந்தத் தொடரில் குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார் பாண்டியா. 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை குஜராத் அணியை அழைத்துச் சென்றார். இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் டிரேடிங் முறையில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கேப்டன் மாற்றம் குறித்து மும்பை இந்தியன்ஸின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே கூறும்போது, “இது பாரம்பரியத்தை கட்டியெழுப்பும் முயற்சியின் ஒரு பகுதி. எதிர்காலத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கொள்கைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா 2013-ம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE