சென்னையில் நடைபெற இருந்த பார்முலா ரேஸிங் சர்க்யூட் பந்தயங்கள் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட்பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங்லீக் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில்சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப் பெரிய மோட்டார் ரேஸ் பந்தயமான இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்கவும் திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் டிசம்பர் 9-ம் மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற இருந்த பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய இரு பந்தயங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE