சென்னை வெள்ளம் | “அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே முக்கியம்” - டேவிட் வார்னர்

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக தலைநகர் சென்னையில் கனமழை பதிவானது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். மழை வெள்ள பாதிப்பு குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் பகிர்ந்துள்ளார்.

“சென்னையின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் வருத்தமடைந்துள்ளேன். இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுடனும் இந்நேரத்தில் எனது எண்ணம் உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மேடான இடத்துக்கு செல்லலாம். நிவாரண பணிகளுக்கு உதவ வாய்ப்புள்ளவர்கள் அதற்கு ஆதரவு அளிக்கலாம். இயன்றவரை ஆதரவளிக்க ஒன்றுபடுவோம்” என வார்னர் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல், ஆந்திராவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கரையை கடந்தது. தமிழகத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பதிவானது. அதனால் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர் வடிந்து வருகிறது. நீர் தேங்கி உள்ள பகுதிகளில் நீரை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE