மும்பை: ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரசிகர்களிடையே ஐபிஎல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மிகப் பெரும் விளம்பர வருவாயை ஈட்டக்கூடியதாக அது உள்ளது. இதனால், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் பெறுவதில் ஊடகங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், 2043-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு 50 பில்லியன் டாலரைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக அருண் துமால் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐபிஎல் உரிம மதிப்பு 6.2 பில்லியன் டாலரை (ரூ.51 ஆயிரம் கோடி) தொடும் என்று மதிப்பிடப்படுகிறது.
உலக அளவில், ஊடக உரிம மதிப்பின் அடிப்படையில் ஐபிஎல் 2-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் நேஷனல் புட்பால் லீக் (என்எஃப்எல்) உள்ளது. அதன் ஊடக உரிம மதிப்பு 110 பில்லியன் டாலர் (ரூ.9.13 லட்சம் கோடி) ஆகும்.