தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு - உத்தரபிரதேசம் கால் இறுதியில் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

சென்னை: 13-வது ஆடவருக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது நாளான நேற்று லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் நடைபெற்றன. ‘டி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் உத்தராகண்ட் - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அந்த அணி சார்பில் ஜுக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா 3 கோல்களும் தில்பிரீத் சிங், ஹர்ஷாகிப் சிங் ஆகியோர் தலா 2 கோல்களும் பர்விந்தர் சிங், சுக்ஜீத் சிங், கன்வர்ஜீத் சிங் ஆகியோர்தலா ஒரு கோலும் அடித்தனர். பஞ்சாப் அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

இதன் மூலம் அந்தஅணி தனது பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

‘ஜி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் உத்தரபிரதேசம் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் உத்தரபிரதேசம் 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் சஹானி 2கோல்களும் சுனில் யாதவ், ராஜ்பார்பவன், லலித்குமார் உபாத்யாய், பராஸ் முகமது, மணீஷ் யாதவ், ராஜ்குமார் பால் ஆகியோர் தலா ஒருகோலும் அடித்தனர். உத்தரபிரதேச அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.

‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி - அருணாச்சலபிரதேசம் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 23-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் வாசுதேவ் 8கோல்களும் லவ்பிரீத் சிங் 4 கோல்களும் தீரஜ் வட்ஸ், ரோஹித், அமித்,ராகுல் கராய் ஆகியோர் தலா 2 கோல்களும் குர்சிம்ரன் சிங், ராகுல்,யாஷ் தாக்குர் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 6 புள்ளிகள் பெற்ற அந்த அணி தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து வெளியேறியது.

ஒடிசாவுக்கு 3-வது வெற்றி: இதே பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஒடிசா - தெலங்கானா அணிகள் மோதின. இதில் ஒடிசா 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ரஞ்சின் கந்துல்னா 2 கோல்களும் அஜய் குமார், நீலம் சஞ்ஜீப்,ரோசன் மின்ஸ், அமித் ரோஹிதாஸ், திப்சன் திர்கே ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதிக்கு முன்னேறியது ஒடிசா அணி.

28 அணிகள் கலந்து கொண்ட தொடரில் லீக் சுற்றின் முடிவில் கர்நாடகா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், ஹரியாணா, ஒடிசா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய8 அணிகள் கால் இறுதி சுற்றுக்குதகுதி பெற்றுள்ளன. கால் இறுதிஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா - ஜார்க்கண்ட் அணிகள் மோதுகின்றன. 9 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - உத்தரபிரதேசம் அணிகளும், பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் 3-வது கால் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - ஒடிசா அணிகளும், 3.30 மணிக்கு நடைபெறும் 4-வது கால் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் - மணிப்பூர் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE