ODI WC Final | வார்னரை வெளியேற்றினார் ஷமி; பும்ரா வேகத்தில் மார்ஷ் அவுட்!

By செய்திப்பிரிவு

அகமாதாபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய பவுலர் ஷமி தனது முதல் ஓவரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் கொடுத்த கேட்ச்சை ஸ்லிப் திசையில் கைப்பற்றினார் விராட் கோலி. தொடர்ந்து மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆகியோரும் வெளியேறினர்.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டியது. அந்த அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர்.

இதில் முதல் ஓவரில் 15 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா. இரண்டாவது ஓவரை ஷமி வீசினார். அவர் டேவிட் வார்னரை 7 ரன்களில் வெளியேற்றினார். உள்ளே வந்த குட்-லெந்த் டெலிவரியை கட் ஆட முயன்றார் வார்னர். அது ஸ்லிப் ஃபீல்டர் கோலி வசம் கேட்ச் ஆனது. தொடர்ந்து பும்ரா வீசிய 5-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்களை இழந்து 93 ரன்களைக் கடந்து வலுவான கூட்டணி அமைத்து முன்னேறி வருகிறது.

இந்தியா இன்னிங்ஸ்: கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். கில், 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார் ரோகித் சர்மா. 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஹெட் அபார கேட்ச் பிடித்து ரோகித்தை வெளியேற்றினார். ஸ்ரேயஸ் ஐயர், 4 ரன்களில் அவுட் ஆனார்.

3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அப்போது கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் 109 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தனர். கோலி, 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் விக்கெட்டை இழந்த விதம் துரதிருஷ்டவசமானது. பின்னர் வந்த ஜடேஜா, 14 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த கே.எல்.ராகுல், ஸ்டார்க் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அவர் பதிவு செய்திருந்தார். தொடர்ந்து ஷமி மற்றும் பும்ரா ஆகியோரும் ஆட்டமிழந்தனர். 45 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது. எப்படியும் சுமார் 20 ரன்களை அவர்கள் தடுத்திருப்பார்கள்.

சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்கு பந்தை மிகவும் நிதானமாக வீசி இருந்தனர் ஆஸ்திரேலிய பவுலர்கள். 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இந்திய அணி. முதல் முறையாக இந்த தொடரில் ஆல் அவுட் ஆகியுள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் எடுக்க வேண்டும். ஸ்டாரக் 3 விக்கெட்கள், கம்மின்ஸ் மற்றும் ஹேஸசில்வுட் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். மேக்ஸ்வெல் மற்றும் ஸாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆகி வெளியேறி இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE