உலகக் கோப்பை இறுதிப் போட்டி - இந்திய அணிக்கு சத்குரு தரும் டிப்ஸ்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: “உலகக் கோப்பையை எப்படி வெல்வது என சிந்திக்காதீர்கள். பந்தை எப்படி அடிப்பது, எதிர் அணியின் விக்கெட்டுகளை எப்படி எடுப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள்” என்று ஈஷா யோகா அமைப்பின் நிறுவனர் சத்குரு யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 13-வது சீசன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இத்தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 19-ம் தேதி நடக்க உள்ள இறுதிப் போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த இறுதிப் போட்டியை காண ஒட்டுமொத்த மக்களும் ஆர்வமாக உள்ளனர். இந்தச் சூழலில், உலக கோப்பையை இந்திய அணி மீண்டும் வெல்வதற்கு ஈஷா நிறுவனர் சத்குரு கொடுத்த ஆலோசனை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்வதற்கு நீங்கள் ஏதேனும் டிப்ஸ் வழங்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியை ஒருவர் சத்குருவிடம் கேட்கிறார்.

அதற்கு பதில் அளிக்கும் சத்குரு, “கிரிக்கெட் ஆடுவது எப்படி என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, அதுகுறித்து நான் ஏன் எதாவது சொல்ல வேண்டும்? ஆனால், இப்போது உலகக் கோப்பையை வெல்வது எப்படி என கேட்கிறீர்கள். கோப்பையை வெல்ல முயற்சிக்காதீர்கள். வெறுமனே அந்தப் பந்தை மட்டும் சிறப்பாக அடியுங்கள். இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களும் உலக கோப்பை வெல்ல வேண்டும் என ஏங்குகிறார்கள் என்ற எண்ணத்துடன் ஆடினால், நீங்கள் பந்தை தவறவிட்டு விடுவீர்கள் அல்லது உலகக் கோப்பையை வென்றால் கிடைக்கும் விஷயங்கள் குறித்த கற்பனையுடன், ஆடினால் உங்கள் விக்கெட்டை பறிகொடுத்துவிடுவீர்கள். எனவே, உலகக் கோப்பை எப்படி வெல்வது என சிந்திக்காதீர்கள். பந்தை எப்படி அடிப்பது, எதிர் அணியின் விக்கெட்களை எப்படி எடுப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள்” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE