ரோகித்தின் 100வது அரைசதம் முதல் கோலி வீழ்த்திய விக்கெட் வரை - ஒரே போட்டியில் இந்தியா படைத்த சாதனைகள் @ODIWC2023

By செய்திப்பிரிவு

பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. லீக் சுற்று முடிவில், இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் செல்கிறது.

நெதர்லாந்துக்கு எதிரான ஒரே போட்டியில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை புரிந்தனர். அவற்றில் சில...

> சர்வதேச போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கி 14,000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை.

> இந்தப் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் கடந்து 61 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ரோகித் சர்மா.

> அதேபோல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஒரு ஆண்டில் மட்டும் 59* சிக்ஸர்களை பறக்கவிட்டு, அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்தார். இவருக்கு அடுத்ததாக டி வில்லியர்ஸ் - 58 (2015), கெயில் - 56 (2019) ஆகியோர் உள்ளனர்.

> மேலும், நடப்பு தொடரில் 24 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் படைத்தார். இவருக்கு அடுத்ததாக மோர்கன் (22 சிக்ஸ், 2019 உலகக் கோப்பை) உள்ளார்.

> நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷுப்மன் கில்.

> நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி! 594 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்ததாக டி காக் - 591 ரன்கள், ரச்சின் ரவீந்திர - 565 ரன்கள், ரோகித் - 503 ரன்கள் உள்ளனர்.

> இப்போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல் ஆகிய 5 தொடக்க வீரர்களும் அரை சதம் விளாசியதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக, முதல் 5 பேட்டர்களும் அரை சதம் விளாசி உள்ளனர். அதேநேரம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது 3வது நிகழ்வு ஆகும். இதற்கு முன் (AUS vs IND, Jaipur, 2013 | AUS vs IND, Sydney, 2020) இரு தொடர்களிலும் நிகழ்ந்துள்ளது.

> இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் விளாசிய சதம், உலகக் கோப்பையில் அவரின் முதல் சதம் ஆகும்.

> மற்றொரு சதம் விளாசிய கேஎல் ராகுல், உலகக் கோப்பை தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இன்றைய போட்டியில் 62 பந்துகளில் இந்த சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 63 பந்துகளில் ரோகித் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

> இன்றைய சிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக விராட் கோலி பந்துவீசினார். தான் வீசிய மூன்றாவது பந்திலேயே நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸை 17 ரன்களில் வீழ்த்தினார் விராட் கோலி. 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது பந்துவீச்சில் விக்கெட் கைப்பற்றினார் விராட்.

> இதன்பின் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பந்துவீசினாலும் அவர்கள் யாருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை.

> விராட் கோலி போல் கேப்டன் ரோகித் சர்மாவும் இப்போட்டியில் பந்துவீசினார். ரோகித் ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்த தேஜா நிடமானுரு, அவரின் அடுத்த பந்திலேயே அவுட் ஆனார்.

> இன்றைய போட்டியில் 9 பவுலர்களை பயன்படுத்தியது இந்திய அணி. இது உலகக் கோப்பை தொடரில் நடக்கும் 3வது நிகழ்வு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE