“வெளியில் நடந்த சதியே காரணம்” - இலங்கை தோல்வி குறித்து தேர்வுக் குழு தலைவர்

By செய்திப்பிரிவு

கொழும்பு: உலகக் கோப்பையில் இலங்கையின் மோசமான தோல்விக்கு வெளியில் நடந்த சதியே காரணம் என அந்த அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மோசமான தோல்வியை தழுவி வெளியேறியது. விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்களுக்கு சுருண்ட இலங்கை, 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின்பு கடுமையான விமர்சனங்களை தாண்டி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் பிரச்சினைகள் வெடித்துள்ளன.

நேற்று பெங்களூருவில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளது இலங்கை அணி. அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை அணியின் தேர்வுக் குழுத் தலைவரும், 1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி வீரர்களில் ஒருவருமான பிரமோதய விக்ரமசிங்கே பேசுகையில், "இலங்கையின் தோல்வி மிகவும் வருத்தமாக உள்ளது. இதற்கு நானே முழுப் பொறுப்பேற்கிறேன். இலங்கையின் மோசமான தோல்விக்கு வெளியில் நடந்த சதியே காரணம். எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். இது பற்றி அனைத்தையும் சொல்கிறேன்" என்று கூறினார்.

இது இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்தியாவுடனான தோல்விக்கு பிறகு ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்துள்ளதாக அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கா அறிவித்தார். மேலும், நிர்வாக பணிகளை கவனிப்பதற்காக, 1996-ல் இலங்கைக்கு உலகக் கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் ஏழுபேர் கொண்ட இடைக்கால குழு ஒன்று நியமித்தார். ஆனால் இதில் நீதிமன்றம் தலையிட்டு இந்த உத்தரவுக்கு தடை விதித்தது. இதன்பின் நேற்று இலங்கையின் பாராளுமன்றத்தில் கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE