ODI WC 2023 | இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38-வது போட்டியில் இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது வங்கதேச அணி. ஆறு போட்டிகளுக்கு பிறகு வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 279 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அசலங்கா 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேத்யூஸ் டைம்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டார்.

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. இந்த தொடரில் விளையாடிய முதல் போட்டியில் ஆப்கன் அணிக்கு எதிராக வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து, நியூஸிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்தது.

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ மற்றும் ஷகிப் அல் ஹசன் இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். இருவரும் 169 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷகிப், 65 பந்துகளில் 82 ரங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 101 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தா ஷாண்டோ. 41.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது வங்கதேசம். ஷகிப் அல் ஹசன், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE