ஆப்கானிஸ்தானை வீழ்த்துவோம்: இமாம் உல் ஹக்

By செய்திப்பிரிவு

சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த உலகக் கோப்பை தொடரில் நாங்கள் பெரிய இன்னிங்ஸ்களை விளையாட வில்லை என்பது உண்மைதான். 367 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கடந்த 2 ஆட்டங்களிலும் எங்களுடைய ஆட்டம் மோசமான வகையில் இருந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

எங்கள் தோல்வி குறித்து ஆய்வு செய்தோம். அதிலிருந்து மீண்டு வருகிறோம். எனவே, நாளைய ஆட்டத்தில் நீங்கள் புதிய அணியைப் பார்க்கலாம். தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியுறும்போது அதிருப்தி ஏற்படுவது இயல்புதான். இருப்பினும் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம்.

நாளைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. சில ஆட்டங்களில் எங்களது வீரர்கள் 70 ரன்கள், 80 ரன்கள் குவித்தும் அதை சதமாக மாற்ற முடியாமல் போனது. இதுதொடர்பாக வீரர்களிடம் அணியின் பயிற்சியாளர் ஆலோசனை நடத்தி குறைகளை சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேபோல் எங்கள் பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர் என்ற பேச்சும் உள்ளது. இது பாகிஸ்தான் அணிக்கு மட்டுமல்ல. அனைத்து அணிகளுக்குமே உள்ள பிரச்சினைதான். அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஷாகீன் ஷா அப்ரிடி சிறந்த முறையில் பந்துவீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஹம்பன்தோட்டாவில் நடைபெற்ற ஆட்டங்களில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ளோம். அதேபோல சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்திலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆட்டத்தில் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள் என்பதை அணியின் கேப்டனே முடிவு செய்வார். இவ்வாறு இமாம் உல் ஹக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE