புதுடெல்லி: பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துகொள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
இவர்கள், 17 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்திய அணியினருடன் பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என 143 பேர் செல்கின்றனர். ஆசிய பாரா விளையாட்டில் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான வீரர், வீராங்கனைகள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். கடந்த முறை ஜகார்த்தாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவில் இருந்து 190 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது 13 விளையாட்டுகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் 15 தங்கம் உட்பட 72 பதக்கங்களை வென்றிருந்தனர்.