பெங்களூரு: ‘‘இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போல் இல்லை. மாறாக பிசிசிஐ நடத்தும் உலகக் கோப்பை போல் உள்ளது’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் விமர்சித்தார். இந்த சூழலில் அதற்கு பதில் அளித்துள்ளது ஐசிசி.
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. வரும் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடின. இந்த தொடரில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது. இதில் இந்தியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்விக்கு பிறகு மிக்கி ஆர்தர் தனது கருத்தை தெரிவித்தார்.
“நாங்கள் நடத்தும் எல்லா நிகழ்வுக்கு வெவ்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழும். அதை கவனத்துடன் கையாள்வோம். இந்த தொடர் தற்போது தொடக்க நிலையில் மட்டுமே உள்ளது. அதனால் இது எப்படி செல்கிறது என்பதை பார்ப்போம். அதனடிப்படையில் என்ன மாற்றம் செய்யலாம், எதனை சிறப்பாக செய்யலாம், உலகக் கோப்பை தொடர் சார்ந்த மேம்பாடு போன்றவற்றை மதிப்பாய்வு செய்வோம். அதே நேரத்தில் தொடரின் முடிவில் இது சிறப்பானதொரு உலகக் கோப்பை தொடராக இருக்கும் என நம்புகிறேன்” என ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே (Greg Barclay) தெரிவித்துள்ளார்.