கொழும்பு: காயத்தால் அவதிப்படும் இலங்கை அணி கேப்டன் தசன் ஷனகா உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அந்த அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 2 லீக் ஆட்டங்களில் இலங்கை அணியை வழிநடத்திய ஆல்-ரவுண்டர் தசன் ஷனகா தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து அணியில் அவருக்கு பதிலாக சமிகா கருணாரத்னே சேர்க்கப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து உலக கோப்பையில் விளையாடும் இலங்கை அணியின் கேப்டனாக தற்போதைய துணை கேப்டன் குசல் மென்டிஸ் செயல்படுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொழில்நுட்பக் குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னரே கேப்டனாக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முதல் 2 ஆட்டங்களில் இலங்கை தோல்வி கண்டுள்ள நிலையில், தசன் ஷனகா விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.