ODI WC 2023 | ஆஸியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

By செய்திப்பிரிவு

லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிகாக், 106 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். மார்க்ரம், 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். பவுமா (35 ரன்கள்), கிளாசன் (29 ரன்கள்), வான்டர் டுசன் மற்றும் மார்கோ யான்சென் தலா 26 ரன்கள் எடுத்தனர்.

312 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. மார்ஷ், வார்னர், ஸ்மித், ஜோஷ் இங்க்லிஸ், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், ஸ்டார்க், லபுஷேன், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் லபுஷேன், 74 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். 40.5 ஓவர்களில் ஆல் அவுட்டாகி 177 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 134 ரன்களில் வெற்றி பெற்றது. இதுவரை நடப்பு உலகக் கோப்பை தொடரில் 2 போட்டிகளில் விளையாடி உள்ள தென் ஆப்பிரிக்க அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. +2.3 நெட் ரன் ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்கா.

ரபாடா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். யான்சன், கேஷவ் மகாராஜ், ஷம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். இங்கிடி 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். சதம் பதிவு செய்த டிகாக், ஆட்டநாயகன் விருதை வென்றார். நாளை சென்னையில் நடைபெறும் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் விளையாட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE