Asian Games 2023 | சர்ச்சைக்குப் பின் ஆடவர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்தியா! 

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கபடி பிரிவில் சர்ச்சை, குழப்பத்துக்குப் பிறகு இந்தியா தங்கம் வென்றுள்ளது.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில் இன்று காலை முதலே இந்திய வீரர்கள் வில்வித்தை, மகளிர் கபடி உள்ளிட்ட போட்டிகளில் தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர். இதன் மூலம் இந்தியா முதன்முறையாக 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், ஆடவர் கபடி பிரிவின் இறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொண்டது இந்திய அணி. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் 28-28 என சமநிலையில் இருந்தபோது, இந்தியா தரப்பிலிருந்து பவன் செராவத் ரெய்டு சென்றார். அப்போது ஈரான் வீரர்கள் அவரைச் சுற்றி வளைக்க, அவர் எல்லைக் கோட்டிலிருந்து வெளியேறினார். இதையடுத்து, ஈரானுக்கு ஒரு பாயின்ட் கொடுக்கப்பட்டது. நடுவரின் முடிவுக்கு பவன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியா ரிவ்யூ சென்றதையடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது.

ஆனால், இந்த முடிவு விரைவில் ரத்து செய்யப்பட்டு, நடுவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. காரணம், பழைய விதிகளின்படி இந்தியாவுக்கு 4 புள்ளிகள் கொடுக்கப்பட வேண்டும் என இந்தியா தரப்பில் கோரப்பட்டது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்து. இரு அணி வீரர்களும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். இவர்களுடன் பயிற்சியாளர்களும் சேர்ந்துகொள்ள, விவகாரம் சர்ச்சையானது. இதனால் போட்டி இடைநிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சுமார் 15 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது. இதனால், 29-29 என்ற சமநிலை மீண்டும் உருவானது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 33-29 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இதன் மூலம் இந்தியா 28 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கல பதக்கம் என மொத்தமாக 103 பதக்கங்களை வென்று 4-ஆவது இடத்தில் உள்ளது.

முன்னதாக, இன்று காலை நடந்த மகளிர் கபடி, வில்வித்தை ஆடவர் மற்றும் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. மகளிர் தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஜோதி சுரேகா. இதே பிரிவில் வெண்கலம் வென்றார் அதிதி. ஆடவர் தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் ஓஜாஸ் தங்கமும், அபிஷேக் வெண்கலமும் வென்றனர்.

தொடர்ந்து மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. இந்தியா 26 புள்ளிகளை பெற்றது. சீன தைபே அணி 25 புள்ளிகளை எடுத்திருந்தது. அதன் மூலம் இந்தியா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE