“நடு ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம்” - ராகுல் திராவிட்

By செய்திப்பிரிவு

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் தற்போதைய சூழ்நிலைகளில் எவ்வளவு ரன்கள் குவித்தால் வெற்றி பெற முடியும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. உலகக் கோப்பை தொடர் என்பதால் வெவ்வேறு நகரங்களில், வெவ்வேறு ஆடுகளங்களில் விளையாடுகிறோம். சிவப்பு மண், கருப்பு மண் ஆடுகளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆடுகளமும் தனித்துவமாக இருக்கும். மேலும் அளவிலும் மாறுபடும். டெல்லி, பெங்களூருவை விட சென்னை ஆடுகளம் அளவில் பெரியது. இதனால் உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் மைதானத்தின் சூழ்நிலை, ஆட்டத்தின் சூழ்நிலை ஆகியவற்றை எவ்வாறு தகவமைத்துக் கொண்டு விளையாடுகிறோம் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது.

ஷுப்மன் கில்லின் உடல் நிலையை மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு வரை, பொறுத்திருந்து பார்ப்போம். சூர்யகுமார் யாதவ் சிறந்த பேட்ஸ்மேன். ஒன்றிரண்டு ஆட்டங்களில் அவர், சிறப்பாக செயல்படவில்லை என்பதை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது. அவரது திறமையை நாங்கள் அறிவோம். நாங்கள் அவருக்கு நம்பிக்கையை கொடுக்கிறோம்.

அவரும், கடினமாக உழைத்து வருகிறார். டி 20 வடிவில் ஸ்கொயர் திசைகளில் சூர்யகுமார் யாதவ் அதிக ரன்கள் எடுக்கக்கூடியவர். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் வேறு பகுதிகளில் ரன்கள் சேர்க்கும் வழியை அவர், கண்டறிய வேண்டும். இதுதொடர்பாக அவருக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளோம். இந்த விஷயத்தில் அவர், அதிகம் வேலை செய்துள்ளார்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நடு ஓவர்களில் சிறப்பாக செயல்படுவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த பகுதி மிகவும் முக்கியமானது.

இவ்வாறு ராகுல் திராவிட் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE