ODI WC 2023 | நெதர்லாந்துடன் இன்று மோதல்: எளிதான வெற்றியை எதிர்நோக்கும் பாக்.

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்:ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

1996-ம் ஆண்டு உலக சாம்பியனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இம்முறை பாபர் அஸம்தலைமையில் களமிறங்குகிறது. இந்திய மண்ணில்அந்த அணி 7 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் விளையாட உள்ளது. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், 14-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தக்கூடும் என கருதப்படுகிறது. இருப்பினும் கடந்த 2019-ம்ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் செய்த தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தக்கூடும்.

ஏனெனில் அந்த தொடரில் பாகிஸ்தான் அணி, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்குஎதிராக 21.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இந்த தோல்வியானது அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பை பாதித்திருந்தது. மோசமான தோல்வியால் ரன் ரேட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியிடம் அரை இறுதி வாய்ப்பை பறிகொடுத்தது.

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் அணியை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. அந்த தொடரில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி அதன் பின்னர் இலங்கையிடம் வீழ்ந்து தொடரில்இருந்தே வெளியேறியது. மேலும் முன்னணிவேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷாவையும் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இழந்தது. உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணியானது நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.

அந்த அணியில் உள்ள வீரர்களில் 2 பேர்மட்டுமே இந்திய ஆடுகளங்களில் இதற்கு முன்னர்விளையாடி உள்ளனர். தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்துள்ள பாகிஸ்தான், தட்டையான இந்திய ஆடுகளங்களில் சீரான வெற்றிகளைபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

பயிற்சி ஆட்டங்களில் பாபர் அஸம் முறையே 80 மற்றும் 90 ரன்கள் சேர்த்திருந்தார். மொகமது ரிஸ்வானும் பார்க்கு திரும்பி உள்ளார். இதனால் இவர்கள் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் ஷதப் கான், உசாமா மிர், மொகமது நவாஷ் ஆகியோருடன் பகுதி நேர வீச்சாளர்களான இப்திகார் அகமது, ஆஹா சல்மான் ஆகியோர் இந்திய ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவூஃப் ஆகியோர் நெதர்லாந்து பேட்ஸ்மேன்களுக்கு தொடக்க ஓவர்களில் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும்.

நெதர்லாந்து அணியானது தகுதி சுற்றில் வெற்றி பெற்று உலகளாவிய தொடருக்கு தகுதிபெற்றுள்ளது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமான அந்த அணி இதுவரை 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. தகுதி சுற்றில் விளையாடாத சுழற்பந்து வீச்சாளர்கள் காலின் ஆக்கர்மான், ரால்ஃப் வான் டெர் மெர்வி, வேகப்பந்து வீச்சாளர் பால் வான் மீகிரன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

பேட்டிங்கில் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வெஸ்லி பாரேசி அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். மேக்ஸ் டவுட், விக்ரம்ஜித் சிங், தேஜாநிடமானுரு, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோரும் மட்டை வீச்சில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். ஆல்ரவுண்டர்களான பாஸ் டி லீடி, லோகன் வான் பீக் ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் தகுதி சுற்றில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி இருந்தனர். லீ டி 285 ரன்களையும், 15 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். அதேவேளையில் வான் பீக் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற சூப்பர் ஓவர் ஆட்டத்தில் 30 ரன்களையும், 2 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்