2011 - 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்: நிலைத்து இருப்பவை, அழிந்தவை - ஒரு பார்வை

By ஆர்.முத்துக்குமார்

இன்று உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் திருவிழா நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்தில் கடந்த உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்துக்கும், ரன்னர்கள் நியூஸிலாந்துக்கும் இடையே நடக்கும் முதல் போட்டியுடன் தொடங்கியுள்ளது. 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் சம்பந்தமாக நடந்த மாற்றங்களுடன் கூடிய ஒரு சில துளிகளைப் பார்ப்போம்:

1. கிரிக்கெட் அதிகார மையம் கொல்கத்தா, மும்பையிலிருந்து இப்போது அகமதாபாத்தாக மாறியுள்ளது. உலகின் மிகப் பெரிய ஸ்டேடியம் சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளைப் பார்க்கலாம். இந்த புதிய ஸ்டேடியம் பெயர் மாற்றப்பட்ட பிறகு ஏகப்பட்ட முக்கியமான போட்டிகளை குறுகிய காலத்தில் நடத்திவிட்டது, இந்தியா-பாகிஸ்தான் போட்டியும் இங்குதான் நடைபெறுகின்றது.

2. 2011-ம் ஆண்டு இந்தியா உலக சாம்பியன்களான போது யுவராஜ் சிங், சேவாக், சுரேஷ் ரெய்னா, சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான் போன்ற முழு ஆல்ரவுண்டர்கள் என்று கூற முடியாவிட்டாலும் கொஞ்சம் பவுலிங்கும் செய்யும் பேட்டர்களை அனைத்து அணிகளுமே கொண்டிருந்தன. அதாவது விக்கெட்டே விழவில்லை, ஒரு பெரிய பேட்டர் நின்று விட்டார் என்றால், அவரை வீழ்த்த இப்படிப்பட்ட பகுதி நேர பவுலர்களிடம் கொடுப்பது வழக்கம். இது பெரும்பாலும் முக்கிய பவுலர்கள் யாரேனுக்கும் அன்று நேரம் சரியில்லாமல் சாத்து வாங்கினால் இவர்கள்தான் உதவி புரிவார்கள். 2012-ல் மட்டும் இப்படிப்பட்ட பவுலர்களின் பயன்பாடு 11.9 என்று இருந்ததாக கிரிக்கெட் மந்த்லி புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது.

இப்போதெல்லாம் பீல்டிங் கட்டுப்பாடுகள், பவர் ப்ளேயெல்லாம் வந்த பிறகு பார்ட் டைம் பவுலர்களை எந்த பேட்டிங் அணியும் குறி வைத்து தாக்குகிறார்கள், ரன் குவிக்கிறார்கள். அதனால்தான் இப்போது பேட்டர்கள் பேட் செய்ய வேண்டும், மாறாக பவுலர்கள் பவுலிங்கும் செய்ய வேண்டும் கடைசியில் தேவைப்பட்டால் இறங்கி பேட்டிங் திறமையையும் சிக்சர்கள் அடிக்கும் திறமையையும் காட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது ஒரு பெரிய மாற்றமாகும்.

3. இரண்டு முனைகளிலும் ஒரே பந்துதான் 2011 உலகக் கோப்பையில் பயன்படுத்தப்பட்டு வந்தது, இதனால் ரிவர்ஸ் ஸ்விங், ஸ்பின்னர்களின் ஆதிக்கம் ஓரளவுக்கு இருந்தது. போட்டிகளை இவர்கள் தீர்மானிப்பவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது இருமுனைகளிலும் இரு பந்துகள் என்பதால் விரல்களில் ஸ்பின் போடும் பவுலர்கள் அருகிப் போய் குல்தீப் யாதவ் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்களைத்தான் அணிகள் அதிகம் விரும்புகின்றனர். டெத் ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் என்பது காணாமல் போய் விட்டது.

4. 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி 20 ஓவர்களில் 131 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. 6 விக்கெட்டுகளும் கையில் இருந்தன. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றது. மாறாக இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு கடைசி 20 ஓவர்களில் 124 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. 7 விக்கெட்டுகள் கையில் இருந்தன தோனி இறங்கினார், கவுதம் கம்பீர் ஒரு முனையை இழுத்துப் பிடிக்க தோனியின் ஐகானிக் சிக்ஸ் மூலம் இந்தியா கோப்பையைத் தூக்கியது. 2007 உலகக் கோப்பை முதல் 2011 உலகக் கோப்பை வரை ஐசிசி முழு உறுப்பினர் அணிகளில் கடைசி 20 ஓவர்களில் 120-180 ரன்கள் இலக்கு 11 முறைகளில் இருமுறைதான் வெற்றிகரமாக விரட்டப்பட்டுள்ளது. இப்போது நிலைமை தலைகீழாக மாறி 20 ஓவர்கள் கிரிக்கெட் வந்து விட்டதால் ஒருநாள் போட்டிகளில் கடைசி 20 ஓவர்களில் 180 ரன்களை வெற்றிகரமாக விரட்டுவது 5 போட்டிகளில் 2 என்று அதிகரித்துள்ளது. 2011 உலகக் கோப்பைக்குப் பிறகே இலக்கை விரட்டும் அணிகள் வெற்றி பெறும் விகிதம் 50% என்று ஆகியுள்ளது.

5. 2011 உலகக் கோப்பைக்கு முன்பு ஒரு வீரர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்தார் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. அதன் பிறகு 9 இரட்டைச் சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. 2015 உலகக் கோப்பையில் இரண்டு இரட்டைச் சதங்கள் எடுக்கப்பட்டன. இந்தியாவில் இரண்டு பேட்டர்கள் இரட்டை சதங்களை இந்த ஆண்டு எடுத்துள்ளனர்.

6. 2015 உலகக் கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட் என்றாலே காமெடி அணி என்று கேலிப்பொருளாக இருந்த இங்கிலாந்து இன்று டெஸ்ட், ஒருநாள், டி20 என்று ரோல் மாடலாக மாறிவிட்டது.

7. கடந்த 3 உலகக் கோப்பைகளிலும் தொடரை நடத்திய நாடுகளே கோப்பையை வென்றுள்ளன. 2011 இந்தியா, 2015 ஆஸ்திரேலியா, 2019 இங்கிலாந்து.

8. 1999 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாததற்காக சேசிங்கின் போது 4 ஓவர்களை அபராதமாக இழந்தது, இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடம் தோற்றது, ஜிம்பாப்வே சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது. இப்போது அப்படியெல்லாம் இல்லை, ஸ்லோ ஓவர் ரேட் என்றால் 30 யார்டு சர்க்கிளுக்குள் ஒரு கூடுதல் பீல்டரைக் கொண்டுவருவதுதான் இப்போது அபராதம்.

9. 2011 உலகக் கோப்பையில் இளம் வீரராக இருந்த விராட் கோலி இன்று ஒருநாள் கிரிக்கெட்டின் விரட்டல் மன்னன் என்கிற ஆளுமையாக உள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற உலக சாதனையை முறியடிக்க கோலிக்குத் தேவை இன்னும் 3 சதங்களே. இந்த உலகக் கோப்பையில் முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

10. நோ-பால்கள் இப்போது டிவி அம்பயரினால் பார்க்கப்படுகிறது. அதே போல் எந்த வகை நோ-பாலாக இருந்தாலும் ஃப்ரீ ஹிட் உண்டு. 2011 உலகக் கோப்பையில் பவுலர் முன் காலை முன் கிரீசிற்கு வெளியே வைத்து வீசும் நோ-பால்கள் மட்டுமே ஃப்ரீ ஹிட்டிற்கு உரியதாக இருந்தது.

11. இந்த முறை 2019 உலகக் கோப்பை போல் பவுண்டரிகளை கணக்கிட்டு டை என்றால் வின்னர்களை தீர்மானிக்கும் நடைமுறை இல்லை. சூப்பர் ஓவரிலும் டை ஆனால் இரு அணிகளும் சாம்பியன் என்று அறிவிக்கப்படும். மேலும் ஒரு சூப்பர் ஓவர் டை ஆனால் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படாது, வெற்றியாளர் தீர்மானிக்கப்படும் வரை சூப்பர் ஒவர் உண்டு. 3 சூப்பர் ஓவர்கள் டை ஆகிவிட்டது, காலநேரமும் முடிந்து விட்டது என்றால் இரு அணிகளும் சாம்பியன் என்று அறிவிக்கப்படும்.

12. பவர் ப்ளே மாற்றங்கள்: 2011 உலகக் கோப்பையின் போது முதல் 10 ஓவர்கள் பவர் ப்ளே, இதில் 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே 2 பீல்டர்கள்தான் அனுமதி. பிறகு பவுலிங் பவர் ப்ளே 5, பேட்டிங் பவர் ப்ளே ஐந்து. பவர் ப்ளே இல்லாத 30 ஓவர்களில் 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே 5 பீல்டர்களுக்கு அனுமதி இருந்தது. இப்போது அதாவது இந்த உலகக் கோப்பையில் வழக்கம் போல் முதல் 10 ஓவர்கள் பவர் ப்ளே, 2 பீல்டர்கள் வெளியே. அடுத்த 30 ஓவர்களுக்கு 4 பீல்டர்களை மட்டுமே சர்க்கிளுக்கு வெளியே நிறுத்த அனுமதி. கடைசி 10 ஓவர்கள் 5 பீல்டர்களை சர்க்கிளுக்கு வெளியே நிறுத்தலாம். இந்த 30 ஓவர்களில் 4 பீல்டர்கள்தான் வெளியே அனுமதியினால்தான் அணிகளின் ரன் விகிதம் எகிறுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் நலம். இதனால் மிடில் ஓவர்களில் பவுலர்கள் பாடு திண்டாட்டமாகியுள்ளது.

13. வெஸ்ட் இண்டீஸ் என்ற ஒரு காலத்திய இமாலய அணி எந்த ஒரு உலகக் கோப்பைக்கும் தகுதி பெறாமல் இருந்ததேயில்லை. இப்போது வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலகக் கோப்பையைப் பார்க்கப் போகிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE